கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் பாபுலால் பிஸ்வாஸ் (வயது 42) திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மேற்கு வங்கம் மாநிலம் நாடியா மாவட்டத்தில் தகர்பூர் நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள நகராட்சியாகும். நாடியா, விவசாயத் தொழிலாளர் இயக்கம் மிகவும் வலுவாகவுள்ள மாவட்டமுமாகும்.
இந்நிலையில், தோழர் பாபுலால் பிஸ்வாஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று இரவு நடந்தது.பஞ்சாயத்து அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பல தொகுதிகளில் கட்டாயப்படுத்தி சிபிஎம் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்துவிட்டபோதிலும், பாபுலால் பிஸ்வாஸின் மனைவி மட்டும் அவர்களின் மிரட்டல்களையெல்லாம் மீறியும், வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து, வன்மம் கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் இவரைப் படுகொலை செய்துள்ளார்கள்.படுகொலை குறித்து பாபுலால்பிஸ்வாஸின் சகோதரர், திரிணாமுல் காங்கிரசின் குண்டர்கள் சஞ்சித்கோஷ் மற்றும் அவருடைய இரு மகன்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள போதிலும், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்கள் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்திருப்பதுடன், புகார்அளித்தவரையே காவல்நிலையத்தி லேயே இருத்திவைத்து, தாங்கள் சொல்லும்படி வேறு புகார் எழுதித்தருமாறு நிர்ப்பந்தித்து வருகின்ற னர்.சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், பட்குல்லாவில் தேசிய நெடுஞ்சாலை 34 மற்றும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டு, கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியல் நடந்த பின்னர், காவல்துறையினர் கொலைகாரர்களைக் கைது செய்வதாக எழுதிக்கொடுத்ததன் பின்னர், மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.
ஞாயிறு அன்று கொல்லப்பட்ட தோழர் பாபுலால் பிஸ்வாஸின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் மிருதுல் தே, நாடியா மாவட்டச் செயலாளர் சுமித் தே, மாநிலக்குழு உறுப்பினர் மெக்லால் ஷேக்,எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ஷாடி முதலானோர், செங்கொடி போர்த்தப்பட்டிருந்த அவருடைய உடலின்மீது மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் தோழர் பாபுலால் பிஸ்வாஸின் உடல், நபாட்விப் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் முன்னணித்தலைவர்களில் ஒருவராக விளங்கிவந்த தோழர் பாபுலால் பிஸ்வாஸ்,திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, மாநிலம் முழுதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள் கிழமையன்று, எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
கொல்கத்தாவிலிருந்து சந்தீப் சக்ரவர்த்தி